Tuesday, October 19, 2010

பெயர் விகடன்

சங்கரன். என் அருமைத் தம்பி. காலையில் இருந்தே ஒரே கவனமாய் அவன் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறான். வழக்கம் போலத்தான் என் உதாசீனம் செய்து விட முடியாதபடி இன்று அவன் வேலையில் விறுவிறுப்பு அதிகமாய் இருந்தது. காரணம் இது தான். இன்று என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். முன்பே எல்லாம் பேசி முடித்தாகி விட்டது. இன்று சும்மா சம்ப்ரதாயமாகத்தான் வருகிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் நல்ல குடும்பம். மாப்பிள்ளையும் சங்கரனைப் போலவே சமையல் காண்டிராக்டர் தான். காப்பிடிக்கி மான்பிடி சன்ச்க்ருதம் கலந்து பேசும் பாலக்காட்டுத் தமிழ் குடும்பம். மாப்பிள்ளை பேரு? கேட்கலையே. பெயருன்னதும் ஞாபகம் வருது. என் பேர சொல்ல மறந்துட்டேனே.

பிறக்கும் போதும் ஏதும் இல்லாம பிறந்து, அப்புறம் கொஞ்ச நாள் சுசீக்குட்டி, கொஞ்ச வருஷம் கழிச்சு சுக்கா, இப்போ சில வருஷமா சுசீன்னு அழைக்கப் படுற சுசித்ரா. சுசீ, சுசீக்குட்டி எல்லாம் சரி, இது என்ன சுக்கா? அங்க தான் நம்ம ஹீரோ என்ட்ரி. அட.. சட்டுன்னு என்னை சந்தேகப் படாதீங்க. இது முழுக்க முழுக்க குடும்பக் கதைங்கரதால அந்த ஹீரோ சாட்சாத் என் தம்பி சங்கரனே தான். இதோ சிரிப்புன்னா என்னன்னே தெரியாம நிக்கிற இந்த சங்கரன் தான் ஹீரோவான்னு வேற ப்ளோக்குக்கு போயிடாதீங்க. நான் சொல்ற சங்கரனுக்கு வயசு நாலு தான். எப்பவும் சிரிப்பு. அப்போ அவன் எனக்கு வச்ச பேரு தான் சுக்கா. சுசித்ரா வாயில நுழையலேன்னு அவனா எனக்கு வச்ச பேரு. சரி பெரியவனானதும் மாத்திடுவான்னு நினைச்சா.. ம்ஹூம்.. அந்த பெயர் ஊர் முழுக்க பரவுனது தான் மிச்சம். ஒரே ஸ்கூல் வேறயா, என் பேரு சுக்கான்னே ஆயிடுச்சு.

"டேய். சுசித்ரா எப்படிடா சுக்காவாச்சு நோக்கு மாத்திரம்?" என்றேன் கோபமாக. "சுசீ+அக்கா= சுக்கா. இது கூட தெரியாதா? ." இந்தக் கேள்வி கேட்டப்போ அவனுக்கு எட்டு வயசு. இந்தப் பெயரைக் கேட்டப்பல்லாம் மாப்பிள்ளைமார் கடை வீச்சம் நாசி தொட்டு குமட்டும். குமட்டுவதுக்கு இது மட்டும் காரணம் இல்லை. இந்த பேரு குமற்ற மாதிரி இன்னொரு காரியமும் செஞ்சிருந்தான் இந்த வாலு. அது என்னனா..

"சுசீ.. தயாராயிட்டியோ? அவாளாம் வந்துட்டா". சில நிமிட பரபரப்புக்குப் பின், "புடிச்சுருக்கா?" அம்மா கேட்டாள். போட்டோ பார்த்தே சரி சொன்ன பின் தானே வந்தார்கள். பின் எப்படி பிடிக்காமல் போகும். ஏதோ சம்ப்ரதயமாக் கேள்வி. சம்ப்ரதாயமா தலையசைப்பு. அவ்வளவு தான். அவர்கள் பாட்டுக்கு எதோ பேசிக் கொண்டார்கள். அடுப்பங்கரையில் இருக்கும் அம்மாவுக்கும் எனக்கும் எதுவும் சரியாக் கேட்கவில்லை. அவர் பெயர் என்னவா இருக்கும்.

எல்லாப் பேருக்குள்ளேயும் விகடமா இன்னொரு பேரு தொக்கி நிக்கும்ங்கறது, சங்கரன் லாஜிக். சுக்கா மட்டும் இல்லை, இன்னும் பலவும் உண்டு. ரப்பர், உறுமி, ரசம் இப்படி. அவனுக்கு அஞ்சு வயசு இருக்கும் போது, இலஞ்சில ஒரு சத்திரத்தில நாங்க எல்லாரும் தங்கி இருந்தோம். அன்னைக்கு காலங்காத்தால ஒரு சுக்கு காபிக்காரன் வந்தான். "சுக்காபீஇ..." ன்னு வழக்கம் போல அளபெடுத்தான். இந்த வாலு இத பிடிச்சுன்னுட்டன். "பருப்பா(பெரியப்பா தான்.) சுக்கா பீ வேணுமா.. சூடா இருக்கு" . எல்லாருக்கும் சிரிச்சி சிரிச்சு வயிறு வலிச்சிருக்கணும். ஆனாலும் சுக்காபீய வயித்துல நிறைச்சுண்டு தான் கிளம்பினா. எல்லாருக்கும் இது மறந்துருக்கும் எனக்கு எப்படி மறக்கும். அஞ்சு வயசு குழந்தையா அவன் சிரிச்சது இன்னும் நினைப்பில இருக்கு.

அப்படி சிரிச்சவனா இப்படி. நல்லா தான் இருந்தோம். ஒரு நாள் திடீர்னு அப்பா சாகிற வரை. அன்னைக்குத் தான் அவன் சிரிப்பைத் தொலைச்சான். நாங்க படிப்பைத் தொலைச்சோம். நான் சுக்காவைத் தொலைச்சேன். கொள்ளி வச்ச கையோட கரண்டி எடுத்துட்டு சாசனம் மாமாவோட (சகஸ்ரநாமம் மாமா) கிளம்பிட்டான். அன்னையிலிருந்து இது வரை யாரும் சுக்கானு கூப்டல. இப்போ யாரவது கூப்பிடனும்னு தோன்றது. இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம், அப்புறம் பாலக்கட்டுக்கே போயிடுவேன். கல்யாணத்துக்கு அப்புறம் உள்ள பேரே போயிடும், இந்த பேரா நிக்கும்? நான் கேட்டு கூப்பிட்டதா இருக்கக் கூடாது. அவனா கூப்பிடணும். கூப்டுவானா?

அவங்க கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாம் சுபம். எனக்கு என்னவோ சங்கரன் சிரிக்றதா தெரிஞ்சுது. அப்பா.. சங்கரன் சிரிக்கிறான். ஆனா முழுசா இல்ல. எனக்கு என்னவோ இன்னிக்கு அவன் இருக்கிற சந்தோசத்தப் பார்த்தா கொஞ்சம் முயற்சி பண்ணினாலே எல்லாம் கை கூடும்னு தோன்றது. சங்கரா.. சிரி.. சங்கரன் எல்லாம் பரிமாறினானே தவிர எதுவும் சாப்பிடவில்லை. இந்தக் காபியைக் கொண்டு போற சாக்கில் அவன் சிரிப்பதை கிட்ட இருந்து பார்த்து விடணும். கார் கிளம்பி விட்டது. என்னைப் பார்த்தான். சிரித்தான். சங்கரன் தானா? அந்த அரை குறை சிரிப்பல்ல இது. ஆத்மார்த்தமான சிரிப்பு. அவன் இழந்த சிரிப்பு அவனுக்கு திரும்ப கிடைத்து விட்டது. இழந்த படிப்பு கிடைக்கப் போவதில்லை. நான் இழந்தப் பெயர்?

"சுக்கா.. மாப்பிள்ளை பேர கேட்டியோ? கறிக்காரனாம்"

Wednesday, February 17, 2010

யாருக்கு உங்கள் வாக்கு?

1969 ஆம் வருடம். நவீன அரசியல் 'தந்திரங்கள்' எதுவும் பெருமளவில் நடைமுறையில் இல்லாத காலம். நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பட்டம் பெற்று உமையாளை மணந்து நான்கு வருடங்கள் ஆகி இருந்தது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்தது. எங்கள் வீடு இருக்கும் ஐந்தாம் வார்டுக்கு ஆளுங்கட்சி சார்பில் பெருங்குளத்துக்காரர் கைலாசம் செட்டியாரும், வன்னிக்கோன் மு.மெ. வள்ளியப்பன் செட்டியாரும் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இருவருமே என் அப்பாவுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், என் தந்தையின் மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள். இருவரும் எங்கள் வீட்டுக்கு வந்து வாக்கு கேட்ட போது என்ன செய்ய என்று நான் கையைப் பிசைந்தவாறு நின்ற போது, அம்மா தான் இருவரிடமும் எங்கள் வாக்கு அவர்களுக்குத்தான் என்று கூறி விட்டார். 'ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு போட்டு விட்டால் ஆச்சு' என்று சுலபமான தீர்வை சொல்லிவிட்டார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இருவரில் எவர் தகுந்தவர் என்று விசாரித்து அவருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்தேன். விசாரித்ததில் 'இருவருமே தகுதியானவர்' என்று புரிந்தாலும், 'நல்லவர் தாமா?' என்பதில் சிக்கல் எழுந்தது. அந்த சில விஷயங்களைக் கேள்வி பட்டதும் இருவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அதற்காக வெற்றி பெரும் வாய்ப்பே இல்லாத ஒருவருக்கு வாக்களித்து வாக்கை வீணாக்கவும் விரும்பவில்லை. என்ன செய்யலாம் என்று விசாரித்த போது பலரிடம் இருந்தும் பல விதமான யோசனைகள் வந்தது "எல்லாருக்கும் குத்தி விடுங்கள், யாருக்குமே குத்த விருப்பமில்லை என்றால் எதையுமே குத்தாமல் வெறும் சீட்டை மடித்து உள்ளே போட்டு விடுங்கள், அதுவும் இல்லை என்றால் சீட்டை மடித்து சொக்காயில் வைத்துக்கொண்டு எதுவுமே தெரியாதது போல் வந்து விடுங்கள்" இப்படி. 'இந்த முறை வாக்களிக்க விருப்பமில்லை அடுத்த முறை நல்ல வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்களிக்க விருப்பம்' என்று நச்சென்று தேர்தல் ஆணையத்திற்கு உரைக்கும் படி சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். யாரிடமும் இதற்க்கான தீர்வு இல்லை. மேலும் இந்த முடிவு "பிரச்னையை வளர்க்கும், ஏன் யாருக்கும்மில்லாத அக்கறை உனக்கு, சிறு பிள்ளைத்தனம்" எனப் பல வாய்க்கும் அவலாகியது.

பல வித கோலாகலங்களுக்கு இடையில் எதிர்பார்த்த வாக்களிக்கும் நாள் வந்தது. இப்பொழுது வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள் வந்த பின் தான் 49-0 பற்றி பரவலாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் அந்த சட்டம் 1961 ஆம் வருடத்தில் இருந்தே இருந்து வருகிறது, இதைப் பற்றி பள்ளி நண்பன் (அவனும் இதற்கு ஒப்பவில்லை) ஒருவனிடம் இருந்து தெரிந்து கொண்டு பாரத்தையும் வாங்கி நிரப்பிக் கொடுத்துவிட்டேன். அதற்குப் பின் தான் எல்லா சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாய் அரங்கேறின. வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கும் கட்சி முகவரின் முறைப்பில் இருந்து, மறு நாள் காலை செய்தித்தாள் முதற்பக்கம் வரை எல்லாமே எனக்கு எதிராகவே இருந்தது. நான் எந்த பாவமும் செய்யவில்லை என்பதை யாரும் புரிந்து கொள்ளத் தயாரில்லை, கைலாசம் செட்டியார் வெற்றி பெற்ற செய்தியை விட நான் வாக்களிக்க மறுத்ததை பெரிய செய்தியாக வெளியிட்டன பத்திரிக்கைகள். என்னைப் பற்றி புறம் பேசுவது அதிகமாகியது, அதிகம் பாதிக்கப் பட்டது உமையாள் தான் ஊர் அவளை "நாபத்தொன்பதாவது ஆச்சி" என்றே அழைக்க ஆரம்பித்து விட்டது. மாவட்டம் முழுவதும் தெரிந்த நபராகி விட்டேன். ஆனால் உண்மையான பிரச்சனை ஆரம்பமானது என்னவோ அடுத்து வந்த சட்ட சபைத் தேர்தலில் தான்.

வாக்கைக் காசுக்கு விற்கலாம் என்ற பொது அறிவு மக்களைச் சென்று சேராத காலமாதலால் வெறும் செட்டிநாட்டு பிரியாணிக்கும், சாராயத்திற்கும் விற்றுக்கொண்டு இருந்தனர். இந்த முறை நான் சந்தோசமாகவே இருந்தேன். ஏனெனில் சுதந்திர போராட்ட தியாகி வல்லம் அழகப்பச் செட்டியார், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எந்த ஒரு குற்றமும் இல்லாத உத்தமர் என்று பெயர் எடுத்தவர். அவருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஏனெனில் அவரை எதிர்த்து போட்டியிட்டது உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்ற வள்ளியப்பன் தான், உள்ளாட்சி தேர்தலில் தோற்றாலும் தொகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு வேறு எவருக்கும் இல்லாததால் மேலிடம் அவரையே சட்ட சபைக்கு போட்டியிடச் செய்தது. தியாகி போட்டியிடுவதில் என்னைத் தவிர வேறு யாருக்குமே விருப்பம் இல்லை என்று தெரிந்தது. ஏன்? தியாகி நல்லவர் தான் என்றாலும், அவர் ஆட்சிக்கு வந்தால் கட்டுப்பாடு மாவட்டத் தலைவர் கணேசன் கையில் தான் இருக்கும் என்று ஊர் முழுவதும் தெரிந்து வைத்திருந்தது. இந்த தகவல் என்னைக் குழப்பியது. அப்பொழுது தான் வாக்கு சேகரிக்க தியாகி கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு முடிவுக்கு வந்திருந்த நான் "இல்லை சார். தியாகிக்கு வாக்களிக்க விருப்பமில்லை. வள்ளியப்பன் மாமாவுக்கு தான் என் வோட்டு" என்றேன். "ஏன் சார்? ரொம்ப நல்லவர். நாட்டுக்காக குடும்பத்தைத் தொலைத்தவர். நம்ப சாதி வேற. நீங்க ஏன்னு சொல்லியே ஆகணும்" என்றான் கும்பலில் ஒருவன்.பதில் சொல்லாவிட்டால் போகமாட்டோம் என்று அடம்பிடித்தார்கள். நான் சும்மா இருந்திருக்கலாம் "நல்லவனா இருந்த போதுமா? திறமையும் வேணுமில்ல". அவ்வளவு தான். தியாகியைக் கொண்டு வந்து என் முன்னால் நிறுத்தி "இப்போ சொல்லுங்க, இவருக்கு ஏன் வாக்களிக்க விரும்பல?"என அதே கேள்வியைக் கேட்டார்கள். முன் ஒன்று பின் ஒன்று பேச என் மனம் ஒப்பாது அவர் மனம் புண் படும் என்று தெரிந்தும் "திறமை பத்தாது" என்றேன் உறுதியாக. தியாகி நிலை குலைந்து விட்டார்.

முன்னை விட இந்த முறை வசமாக மாட்டிக் கொண்டேன். "வாக்களிக்க விருப்பமில்லை" என்றதும் விலகி செல்லாமல் என்னைக் கட்டாயப்படுத்தி அந்த வார்த்தைகளை வரவழைத்தவர்களை யாரும் எதுவும் கேட்கவில்லை. இந்த முறை தேர்தலுக்கு முன்பே என் பெயர் தலைப்புச் செய்திகளில். பெரியவர்களை மதிக்கத் தெரியாதவன் என்று கெட்ட பெயர் ஊர் முழுவதும். இந்த முறை வெளியில் தலை காட்ட முடியவில்லை. நல்லவர்கள் முதல் கெட்டவர்கள் வரை அனைவருக்கும் கெட்டவன் ஆகிவிட்டேன். ஊர் முழுவதும் "மரியாதை தெரியாத மெய்யப்பன் ஒழிக" என்று கோஷங்கள். என்னைப் பழிப்பதற்கென்றே புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டன. நிலைமையின் தீவிரம் உணர்ந்து வாக்களிக்கக் கூட வீட்டில் இருந்து ஒருவரும் வெளியில் செல்லவில்லை. வாக்கு எண்ணும் நாளும் வந்தது. வள்ளியப்பன் தான் வெற்றி பெற்றிருந்தார். ஆனாலும் தியாகியின் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வென்று முதல்வர் பதவியையும் கைப்பற்றி இருந்தது. வெற்றியின் அதிகாரமும், தோல்வியின் குமுறலும் எனக்கு எதிராய் திரும்பி இருந்தது. அவர் தோற்றதற்கு நான் தான் காரணம் என்று பலரும் நம்பவைக்கப் பட்டிருந்தனர்.

முதல்வர் பதவி ஏற்ற நாளுக்கு அடுத்த நாள் "மெய்யப்பன் ஒழிக" கோஷம் காதுக்கு வெகு அருகில் கேட்டது. வாசலில் ஒரு பெரும் படை நின்றது. வீட்டுப் பெண்கள் நடுங்க ஆரம்பித்தனர். கதவு தட்டப் பட்டது. இந்தப் பெரும்படைக்கு தேக்கு கதவாய் இருந்தாலும் தாங்காது என்று முடிவு செய்து கதவைத் திறந்தேன். கூட்டத்தை அமைதி காக்கும் படி சைகை செய்து கணேசனும் ஒரு இளைஞனும் உள்ளே நுழைந்தனர். "டேய் நீ என்ன பெரிய கொம்பனா? படிச்சா என்ன வேணா பேசுவியா? உன் தாத்தா வயசு உள்ளவரை மரியாதை இல்லாம பேசுறியா? அவருக்கு திறமை இல்லன்னு சொல்ல நீ யார்ரா? உனக்கு நெறைய தெறம இருக்கா?" கத்திக் கொண்டே இருந்தான் அந்த இளைஞன். நான் வாயடைத்துப் போய் இருந்தேன். பயத்தை விட குற்ற உணர்வு தான் என் வாயை கட்டிப் போட்டிருந்தது. என்ன ஆனாலும் எதுவும் பேசக் கூடாது என்று முடிவுடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். "படிச்சவன். பொறுமையா இருப்பேன்னு தான் உன்னைக் கூட்டியாந்தேன். நீயுமா இப்படி. கொஞ்சம் வெளியே இருப்பா" என்று அவனையும் வெளியே அனுப்பிவிட்டு கணேசன் தொடர்ந்தார்.

"பையன் யார்னு தெருதா? ரெண்டு வாரத்துக்கு முன்னாடி IPS பாஸ் பண்ணினான்னு பேப்பர்ல வந்தானே பாலாஜி, நம்ப பய தான். படிச்சவனே இவ்வளவு கோவமா இருக்கும் போது மத்தவுக என்ன நினைப்பாக உங்களைப் பத்தி. அதான் உங்களைப் பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன். முதல்ல என்னை மன்னிச்சிருங்க. குழம்பாதீக. இன்னிக்கு கட்சி தமிழ்நாட்டில நல்ல நிலைல இருந்தாலும் நம்ம தொகுதியில நல்ல ஆளுக அமையல. தியாகியை நிறுத்தினா டெபொசிட் கூட கிடைக்காதுன்னு தெரியும். அதான் அன்னைக்கு நம்ம பயலுங்கள விட்டு வார்த்தையைப் புடுங்க சொன்னேன். நீங்க சொன்னத விளம்பரப் படுத்தி அனுதாப அலைகளைச் சேர்த்ததால தான் டெபொசிட் கிடைச்சது. இந்த டெபோசிட்ட உங்களுக்கே நஷ்ட ஈடா கொடுத்துர்றோம். அதோட இப்போவே எங்களோட வந்து தியாகியைப் பார்த்து ஒரு மாலையைப் போட்டு ஒரு மன்னிப்பு கேட்டுடுங்க. அதை நாளைய பேப்பர்ல போட்டுட்டா உங்க பிரச்சன எல்லாம் ஒழிஞ்சிடும். அப்புறம் பாராளுமன்ற தேர்தல்ல உங்களுக்கு சீட்டு வாங்கித் தர்றது என் பொறுப்பு. என்ன சொல்றீக?" என்று முடித்தார் கணேசன். வாசலில் "மெய்யப்பன் ஒழிக" கோஷம் விண்ணைப் பிளந்தது.

Wednesday, January 27, 2010

கழுத்தையும் அறுத்துக் கொண்டாயிற்று

என் பெயர் வீரபத்திரன். வரைபடத்தில் தேடினாலும் கிடைக்காத மிகச் சிறிய தேசமான திறந்த-மண்ணின் மாபெரும் சைனியத்தில் ஒரு சாதாரண படைவீரன். களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப சிறு வயது முதலே சைனியத்தில் சேரவேண்டும் என்ற அவா நிறைவேறியது என்னவோ நான்கு வருடங்களுக்கு முன்பு. மன்னரின் கீழ் பாதுகாப்பு அமைச்சர், அவர் கீழ் படைத் தலைவர்கள், அவர்கள் கீழ் படைவீரர்கள் என்ற எளிமையான கட்டமைப்பு கொண்டது சைனியம். எப்பொழுதும் ஏதாவது போர் என்று ஒரு பொழுதும் சைனியம் நிலையாக தலைநகரில் நின்றதில்லை. எப்பொழுதும் போர் என்பதாலோ என்னவோ படை வீரர்கள் களைத்துக் காணப்பட்டார்கள், பெரும்பாலானவர்கள் விழுப்புண்கள் என்று பெருமை கூறிக் கொள்ள முடியாத அளவுக்கு சீழ் கட்டிய புண்களுடன் வாழ்ந்து வந்தார்கள். சைனியத்தில் சேர்ந்த முதல் இரண்டு வருடங்களில் கூதிர் காலத்து மாமழை நிறைய வீரர்களைக் காவு கொண்டது. புண்கள் புரையோடி, சுரம் கண்டு நோய் கொடுமையால் ஏதேதோ பிதற்றிக் கொண்டு தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். நகரெல்லாம் பெருமையாகப் பேசும் சைனியத்தில் வீரர்களின் உயிருக்கு ஒரு மதிப்பில்லையா?

இந்த எண்ணம் தோன்றியதும் பாதுகாப்பு அமைச்சர் முன்னால் நின்றேன். "அடியேன் தெண்டம். பயிர் வளம் காண வந்த மழை உயிர் வளம் கவர்தல் என்ன முறையோ? சீழ்ப்பட்ட புண், சுரம் கண்டு வீரர்கள் வீழ்தல் முறையோ? ஓய்வும் மருந்தும் பேருயிர் உய்விக்கும் என அறிந்தார் இலரோ?" எனக் கேட்டேன். "வந்தார் செல்வதும், புதியோர் புகுதலும் உலக நியதி என அறியா சிறு குழந்தாய் கேள். நோய்க்கு வழி மருந்தல்ல காண், உளத்தீரம்" என்றார். இளம் கன்று பயம் அறியாது என்பார்களே, அது உண்மை தான் யாரும் உரைக்கத் தயங்கும் உரை ஒன்று உரைத்தேன். "படை நிலை கண்டு வருந்தா, உடைப் பொருள் ஒன்றே குறியாக் கொண்டது தான் அமைச்சா? வழி நடத்தும் பெரியோர் இன்றி கழி நிலைப் படை வாகை சூடும் வழி எது உரைப்பீர்". "மூடனே! படை நடத்தல் பற்றி பாடம் புகலுவையோ? புண் கொண்டு வாழ்தல் அரிதா? இதோ உன் கை விரல்கள் துண்டித்தேன். வீழ்வையோ வாழ்வையோ யானே கண் கொண்டு காண்கிறேன். போ"

என் கை விரல்கள் இரண்டை இழந்த பின், அமைச்சரிடம் பேசும் துணிவை இழந்திருந்தேன். அமைச்சர் தான் இப்படி, ஆனால் மன்னர் மிகவும் நல்லவர். நாடு நகரங்கள் எல்லாம் பஞ்சத்தால் வாடி பெரிய பெரிய நாடுகளில் எல்லாம் மக்கள் மடியும் போது, எம்மன்னர் கஞ்சித் தொட்டி திறந்து பஞ்சம் போக்கினார். அந்த வருடம் எம்மண்ணில் கூதிரும் இல்லை கூற்றுவனும் இல்லை. வட திசைப் போரில் படைத்தலைவர் மாராயர் வழி நடத்த சென்ற ஒரு சிறு சைனியத்தில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்து படை நடத்தினேன். மாரயரின் படையில் இது காறும் மும்முறை இடம் பெற்றுள்ளேன். போர்க்களப் பயிற்சியில் அவரே என் குரு. அந்த வயதிலும் அவர் வாள் வீசும் வேகத்தைக் கண்டால் பேடியும் "வாள் வாள் " என்று கத்துவான். நான் அவர் மீது கொண்டது பக்தி என்றால் அவர் என் மீது கொண்டது நம்பிக்கை. எனக்கும் அமைச்சருக்கும் இடையே இருந்த பிரச்சினை குறித்து தோராயமாக அறிந்து வைத்திருந்த அவர் ஓரளவு சமரச முயற்சியிலும் ஈடுபட்டிருப்பார் என நினைக்கிறேன். வடதிசை நாட்டின் படைபலம் பற்றி அறிய வேவு பார்க்க சென்ற போது என்னையும் உடன் அழைத்துச் சென்றவர் என்ன காரணத்தாலோ ஐந்தே நாட்களில் திரும்பி விட்டார். நான் தனியனாக ஒரு திங்கள் ஒற்றனாகப் பணி முடிந்து திரும்பிய நேரம் அனைத்தும் மாறி இருந்தது.

பாதுகாப்பு அமைச்சர் கொலை செய்யப்பட்டு இருந்தார். யார் காரணம் எனத் தெரியவில்லை. குழப்பங்கள் நிறைந்த இந்த தருணத்தில் தான் பலரும் நகர் நோக்கி படை கொண்டு வந்தனர். அவசர நிலையில் மன்னர் நகரமாதண்ட நாயகரை பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்தார். இந்த முடிவில் படைத்தலைவர்களுக்கு குறிப்பாக மாராயருக்கு ஏனோ உடன்பாடு இல்லை. ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதாக எண்ணினார். எனக்கு பாதுகாப்பு அமைச்சரைப் பிடிக்காது என்றாலும் அவர் சாக வேண்டும் என எண்ணியதில்லை. ஏனெனில் அவர் படை நடத்தும் திறம் எவருக்கும் வராது. ஆனால் புதியவர் அவரினும் வல்லவராகவும் நல்லவராகவும் இருந்தால் என்ற எண்ணம் நம்பிக்கை அளித்தது. வடதிசைப் போர் வலுவாக இருந்ததால் மாரயரும் நானும் போர்க்களத்தில் மட்டுமே சிந்தை கொண்டோம்.

இந்த நேரத்தில் தான் என் தாயின் உடல் நிலை சரி இல்லை என்ற செய்து வந்தது. ஊருக்கு செல்ல வேண்டும் என்று மாராயரிடம் விடுப்பு கேட்ட போது, போரைச் சீக்கிரம் முடித்து விடுவோம், சற்று பொறுத்துக்கொள். அதன் பின் எவ்வளவு நாள் வேண்டுமோ எடுத்துக்கொள். நீ இல்லாமல் படை நடத்துவது கடினம் என்று சமாதானம் கூறினார். ஐந்து மாதங்களுக்குப் பின் போர் இன்னும் ஐந்து நாட்களில் முடியும் என்று தோன்றியது. இந்த சமயத்தில் தான் என் தாயின் உடல் நிலை இன்னும் மோசமாகி விட்டது என்ற செய்தி வந்தது. போர் முடிந்து விடும் என்று நிச்சயம் ஏற்பட்டதால் மாராயரிடம் சென்று அன்றிரவே ஊருக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தேன். அப்பொழுது வந்த வீரன் ஒருவன் மாராயர் அழைக்கின்றார் என்றான். நான் அவர் கூடாரத்திற்குள் சென்ற போது மாராயர் என்னையே வெறித்து நோக்கிக் கொண்டு இருந்தார். என்னை வீரர்கள் சூழ்ந்து கொண்டனர், என் உடலில் பல்வேறு பகுதிகளில் கத்தி இறங்கியது. நான் மூர்ச்சையுற்றேன்.

நான் விடுமுறையில் வந்து ஒரு மாத காலம் ஆகி இருந்தது. நான் வந்த சில நாட்களில் என்னைக் கண்ட சந்தோசத்திலேயே என் தாய் உடல் நலம் தேறியிருந்தாள். ஆனால் என் உடலில் விழுந்த கத்திக் குத்துக் காயங்கள் எதுவும் ஆறவில்லை. மருந்தே நுழையாத தேசம் ஆயிற்றே திறந்த-மண். அந்த சமயத்தில் தான் குணதிசையில் படை நடத்திச் செல்ல தகுந்த வீரன் வேண்டும் என என்னை அழைத்தனர். இம்முறை படைத் தலைவர் வல்லவரையர். வடதிசைப் போர் வெற்றிக்குப் பின் மாராயர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரை சந்திக்கச் சென்ற போது அவர் ஓய்வில் இருப்பதாகக் கூறி என்னை சந்திக்க அனுமதிக்க வில்லை. வட திசைப் போரில் என் சாகசங்களைக் கேள்வியுற்ற வல்லவரையர் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டு இருந்தார். பட்ட காயங்கள் அவ்வப்பொழுது உறுத்திக் கொண்டு இருந்தாலும் குனதிசைப் போரில் என் பங்கு திருப்தி கரமாகவே இருந்தது. அனுபவமிக்க படை வீரன் என்பதால் வீரர்களும் என் கட்டளைக்கு அடி பணிந்து மேலும் மேலும் வெற்றியைச் சேர்த்தனர். இந்த சமயத்தில் தான் மாராயரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் செண்ட போழ்து அவர் தன இறுதி மூச்சை இழுத்துக் கொண்டுஇருந்தார். அவர் உடல் எங்கும் காயங்கள் புரையோடி இருந்தன. என்னை அருகே அழைத்து என் காதில் "நீ மடிந்தனை என கருதுற்றேன். இம்மண் உன் வல்லன்மைக்கு ஒப்பது அன்று " என்றார். நானோ "சீரிய தொண்டிற்கு சீரும் சிறப்பும் பலன்களாம்" என்றேன். என்னைப் பார்த்து புண் முறுவல் செய்தார். மறு கணம் அவர் உயிர் பிரிந்தது.

அவருக்கு என்ன நேர்ந்தது என்று வல்லவரயரிடம் வினவிய போது அவர் சாவிற்கு அவரே காரணம். மேல் திசைப் போரில் அவரின் செயல் பாடுகள் குறித்து மாதண்ட நாயகம் மன்னரிடம் அத்ருப்தி தெரிவித்து இருக்கிறார். மாரயரின் திறன் அறிந்த பாதுகாப்பு அமைச்சரோ, மாராயருக்கு ஆதரவாக பேசியதோடு அல்லாமல் தண்ட நாயகரைப் பழித்தும் பேசிவிட்டார். மன்னரிடம் அதிக செல்வாக்கு கொண்ட தண்ட நாயகரைப் பழித்ததே இவ்விருவரின் அழிவுக்குக் காரணம். "அப்படி என்றால் இவ்விருவரின் மரணத்திற்கும் தண்டநாயகர் தான் காரணமா?". "தெரியவில்லை. எதற்கும் ருசு வேண்டும் அல்லவா?". அந்த வருடத்திய கூதிர் வந்தது. என் உடல் நிலை மோசமாகியது. காயங்கள் சீழ் கோர்த்தன. வலியில் ஏதேதோ உளறினேன். நோய்வாய்ப்பட்ட முதியவர்களின் நிலைக்கு ஆளானேன். என் உயிரைக் காக்குமாறு கெஞ்சினேன், அதட்டினேன். வல்லவரயரையும் விட்டு வைக்க வில்லை. அவர் எனக்கு புத்தி பேதலித்து விட்டது என்றார். நான் செத்தாலாவது எனக்கு பதில் ஒரு படை வீரனை பெற்றுக்கொள்ளலாம் என என் காது படவே பேசினார். நானும் என்னைக் கருணைக் கொலை செய்து விடும்படி கெஞ்சினேன். ஜீவகாருண்யம் பேசி மறுத்து விட்டார். எங்கு சென்றாலும் என்னை வீரர்கள் தூக்கிச் செல்வது என்ற நிலைக்கு என் நிலை மோசமாகியது. ஆயினும் என் வீரர்கள் என் உத்தரவைக் கேட்டு அதன்படி நடந்து வெற்றியைச் சேர்த்துக்கொண்டே இருந்தனர். இதுவும் வல்லவரையர் என்னைக் கொல்லாததற்குக் காரணமாகவும் இருக்கலாம். ஆனால் சமீப காலமாக என் நினைவு தப்பி விடுகிறது. அந்நேரம் சரியான வழிநடத்தல் இன்றி படை சேதமுறுகிறது. அவர்களின் சேதத்திற்கு நானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு உறுத்துகிறது. எனக்கு உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை அற்று விட்டது. இந்தப் போரை முடித்து உயிரை மாய்க்கலாம் அல்லது ஒய்வு எடுக்கலாம் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வப்பொழுது தப்பும் நினைவு நான் போர் முடியும் வரை தாங்க மாட்டேன் என்று என்ன வைத்து விட்டது. இறந்து போன மாராயர் வேறு அவ்வபொழுது வந்து, 'வந்து விடு வந்து விடு' என்று அழைக்கிறார். அதான் இந்த முடிவு. என் உயிரை மாய்க்கப் போகிறேன். எனக்குப் பதில் வல்லவரையர் ஒரு தகுதிவாய்ந்த வீரனைத் தருவித்துக்கொள்வார். "இதோ வந்து விடுகிறேன் மாராயரே." கூர்வாள் கொண்டு என் கழுத்தை அறுத்துக் கொள்கிறேன்.

கதையைப் படித்து முடித்தப் பின் "என்ன இது? எதற்கு இந்த கதை?"என்றார் மானேஜர். "இதோ இந்த கடிதத்தையும் படித்து விடுங்கள். என் ராஜினாமா கடிதம்". "ஏன்?". "இந்தக் கதையில் வரும் வீரபத்திரன் நான் தான். அந்தக் கூர்வாள் உங்கள் கையில் உள்ள கடிதம்". மறுபடியும் இந்தக் கதையைப் படித்தார். படித்து விட்டு "மன்னரிடம் பேசவா?"

"வேண்டாம். தேவைப் படாது. கழுத்தையும் அறுத்துக் கொண்டாயிற்று".

Sunday, January 10, 2010

எப்படி மறந்தாய்?

எப்படி மறந்தாய்? வசந்தி.. பத்தாம் வகுப்பு முடிய ஒன்றாக படித்தவள். நான் பத்தாம் வகுப்பு தேர்வில் தோற்றதும் சித்திக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. வந்ததில் இருந்து விடுதி வாசம் தான். இரவு வேலை. காலை முழுவதும் உறங்கி விட்டு மதிய உணவுக்குப் பின் எங்காவது ஊர் சுற்ற செல்வது வழக்கம். மாலை விடுதி வந்ததும் வேலைக்குத் தயாராவதற்கு மட்டுமே நேரம் இருக்கும். இப்படி தான் ஐந்து வருடங்களுக்கு முன் மதிய உணவுக்குப் பின் நகர் வலம் சென்ற போது வசந்தியை மறுபடியும் சந்தித்தேன். எப்படி அவளிடம் பேசுவது? என்ன செய்கிறாய் என்று கேட்பாளே? தயங்கி நின்றேன். ஆனால் அவளே வந்து அறிமுகம் செய்து கொண்டு பேசினாள். அன்று முதல் அவளோடு மட்டுமே தனியே ஊர் சுற்றுவது என்று ஆகி விட்டது. முதலில் கடைத்தெரு, கோயில் என்று இருந்தது பின்னர் கடற்கரை, தியேட்டர் என்று மாறியது. இப்படி செல்லும் போது தெரிந்தவர்கள் யாரவது அவளோடு பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று பயம் இருந்தது. எனக்குத் தேறுதல் சொல்லி ஆற்றுப் படுத்தியதே அவள்தான். அவளா.. வேறு ஒருவனுடன் ஓடி விட்டாள்?

எப்படி மறந்தாய்? வசந்தி.. ஐந்து வருடங்களுக்கு முன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு நகரத்தில் உள்ள பிரபலமான் பெண்கள் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்தாள். அதன் பின் கே கே நகர் பஸ் டிப்போவை ஒட்டி செல்லும் சாலையில் பழைய மரப் பொருட்கள் விற்கும் கடைத் தெருவை கடந்து போனால் வரும் ஒரு சிறிய தெருவில் சில பெண்களுடன் தங்கி இருந்தாள். அங்கிருந்து அவள் அலுவலகம் மிக அருகில். நன்றாக சம்பாதித்தாள். என்னை வேலையை விட்டுவிடும் படியும் அவளே என்னைப் பார்த்துக்கொள்வாள் என்றும் கூறினாள். ஒரு பெண்ணை நம்பி செல்வதா? தவிர அவளுடன் வெளியில் செல்லவே யோசிக்கும் நான் அவளுடன் தங்கினால்? அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்? சமூகம் என்ன பேசும்? அவள் நேற்றிரவே அவனுடன் ஓடி விட்டாளாம். அவளைப் பெற்றவர்கள் இந்நேரம் அவளைத் தேடிக் கொண்டு இருப்பார்கள். நிச்சயம் என்னைப் பற்றியும் விசாரிப்பார்கள். அவர்கள் கண்ணில் படுவதற்குள் சென்று விட வேண்டியது தான். டிப்போவில் காத்து நிற்காமல் உதயம் தியேட்டர் நிறுத்தத்துக்கு நடக்க ஆரம்பித்தேன்.

எப்படி மறந்தாய்? என்னைக் கை விடமாட்டேன் என்று சொன்ன சொல்லை எப்படி மறந்தாய்? மரீனா செல்லும் ஒரு பேருந்து கூட்டத்துடன் வந்தது. எவனோ ஒருவன் "ஏய் வரியா? என்ன ரேட்டு?" என் பின்னல் நின்ற பெண் கூனிக் குறுகி நின்றாள். இன்று முடியாது .. இதே வேறு ஒரு நாளாக இருந்தால்.. அந்தப் பெண் பேருந்தில் ஏறிக் கொண்டாள், அவளைத் தொடர்ந்து நானும் ஏறிக் கொண்டேன். கூட்டம் அதிகம் தான். இடி மன்னர்கள் குதூகலித்துக் கொண்டு இருந்தார்கள். அந்தப் பெண்ணை இப்பொழுது வேறு ஒருவன் பின்புறம் ஒட்டி நின்று உரசிக் கொண்டு இருந்தான். அவள் மேலும் குறுகினாள். வசந்தியின் ஞாபகம் வந்தது. இப்படி தான் பேருந்தில் செல்லும் போதெல்லாம் கூசிப் போவாள். அந்த நேரத்தில் எல்லாம் அவளை என் அணைப்பில் கொண்டு வந்து.... அவன் எல்லை மீறினான். நான் அந்த பெண்ணின் பின்னால் அவனை தள்ளி விட்டு விட்டு நின்று கொண்டேன். வேண்டுமானால் என்னை உரசிக் கொள்ளட்டும். என்னைப் பார்த்ததும் சிரித்தபடியே ஒன்றுமே தெரியாதவன் போல் விலகிக் கொண்டான்.

எப்படி மறந்தாய்? எத்தனை முறை அந்தக் கயவர்களிடம் இருந்து உன்னை அரவணைத்துக் காத்தேன்? என்னை அரவணைக்க மட்டும் எப்படி மறந்தாய்? '.................' ரயில் நிலையத்திற்கு இடது புறம் உள்ள சாலையில் மூன்றாவது சந்து இளைஞர்களிடம் வெகு பிரபலம். நகரத்தின் பெரிய சிவப்பு விளக்கு பகுதிகளில் இதுவும் ஒன்று. கால் போன போக்கில் அனிச்சையாக அந்த சந்தில் நுழைந்த போது மணி ஐந்து. புரோக்கர்கள் அப்பாயின்மென்ட் பிக்ஸ் செய்ய அவசர கதியில் அலைந்து கொண்டு இருந்தார்கள். தெரு முனையில் மாருதிகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டு இருந்தன. ஒரு சிலர் "தொழில்" ஆரம்பிக்கும் முன்னே நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தனர். ஆறு மணிக்கெல்லாம் கூட்டம் அலைமோதும். இங்கு தான் கவிதா இருக்கிறாள் . எல்லாம் 'தொழில் முறைப் பழக்கம்' தான். வசந்தி இல்லை என்று ஆனதும் பல நாட்கள் காணமல் இருந்த இவளைத் தேடிக் கால்கள் வந்து விட்டன. பழக்கமான புரோக்கர் ஒருவன் பல்லிளித்தான். "எதாச்சும் வேணும்னா.." என்று இழுத்தான். "இல்ல வேண்டாம்" என்று சொல்லிய படியே அந்த வீட்டுக்குள் நுழைந்தேன். பழக்கமான 'ஆள்' என்பதால் யாரும் தடுக்க வில்லை. கவிதா எதிரில் வந்தாள். "வாசு நீயா? நீ வருவேன்னு தெரிஞ்சிருந்தா புரோகிராம கான்சல் பண்ண சொல்லி இருப்பேனே? கை நீட்டி காசு வாங்கியாச்சு.. வெளியே வேன் நிக்குது..இப்போ முடியாது.. உள்ளே அனிதா இருக்கிறா.. அவகிட்ட கேட்குறியா?" .. 'அனிதாவா? அவ எப்போ இங்கே வந்தா?'.. கவிதா போய் இருந்தாள்.

எப்படி மறந்தாய்? நீ விட்டு சென்றால் நான் இந்தக் குழியில் தான் விழுந்து கிடப்பேன் என்று தெரிந்தும் ஏன் என்னை விட்டுச் சென்றாய்? அனிதாவும் அவசரம் அவசரமாய் தயார் ஆகிக் கொண்டு இருந்தாள். "வா வாசு.. இன்னிக்கும் வேலைக்கு போகலியா? உன் க்ளோஸ் பிரண்டு ஆனந்து ரெண்டு நாளா என் கூட தான் சுத்திட்டு இருக்கான். அவன் தான் சொன்னான். இன்னிக்கும் அவனோட ப்ரோக்ராம் தான்." ஆனந்துக்கு ஒரு நாள் கூட பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது. "நீ இரேன். நான் ராத்திரிக்குள் வந்துடறேன்." அவள் பறந்து விட்டாள். அறையில் யாரும் இல்லை. வாய் விட்டு அழ வேண்டும் என்று தோன்றியது.. அழுதேன்.."எனக்கு இதில் இருந்து விமோசனமே கிடையாதா? வசந்தி இந்த வேலையை விட்டு உன்னுடனே வந்து வேறு வேலை செய்து பிழைக்கலாம் என்று இருந்தேனே? என்னைப் பற்றி எண்ணாமல்.." செல் அழைத்தது. எடுத்தேன்.. "இன்னியோட மூணு நாள் ஆறது.. நாளைக்கு பார்க்கலாமே.." இந்த மூன்று நாள் மட்டும் தான் விடுதலை. அதுவும் நானாக எடுத்தால் தான் ஆயிற்று.

'நான் வாசு என்கின்ற வசுமதி'.