Tuesday, October 18, 2011

உடனே கிளம்பி வரவும் - 1

(சற்றே பெரிய சிறுகதை. உரையாடல்களில் வரும் பிற மொழிச் சொற்கள் வலிந்து தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளன)

"வந்தவர்களை வாழ வைக்க வேண்டாம். நட்புணர்வுடன் வருபவர்களை வாயில் வந்து வரவேற்கும் நல்லுணர்வையுமா இழந்து விட்டோம்? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இனம், மொழி என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழப் போகிறோம். பரந்த மனதுடன் பாரபட்சமின்றி அனைவரையும் சரிசமமாக நடத்தும் போக்கு உலகம் எங்கும் வந்து விட்டப் பின்னும், நாம் மட்டும் இன்னும் ஏன் இந்த குட்டையில் உழன்று கொண்டிருக்கிறோம்? நம் எண்ணங்கள் ஏன் இன்னும் விசாலமாகவில்லை? கடவுளர்கள் கூட, நம்மவர்கள், அந்நியர்கள் என்ற பிளவு பார்ப்பதில்லையே? அற்ப மனிதர்கள் மட்டும் ஏன் இந்த பிரிவினை உணர்வுடன் கட்டுண்டு கிடக்கின்றோம்?"

"நீங்கள் நினைப்பதில் தவறென்று ஏதுமில்லை. உங்களைப் போன்று உயரிய கல்வி இங்கு யார்க்கும் வாய்க்கவில்லை. இது போன்ற நற்சிந்தனைகள், உங்கள் கல்வியினால் வாய்க்கப் பெற்றது. எனினும், திடீரென்று, உங்களுக்கு இந்த சிந்தனைகள் வரக் காரணமென்ன?". மேனகாவின் விழி கேட்கும் கேள்விக்கு, புருவங்கள் கேள்விக் குறியாகி நிற்பதை அம்பி பார்த்திருக்கிறான். அவள் மொழி கேட்கும் கேள்விக்கு, குறி எங்கு நிற்கும் எனத் துழாவினான். கேள்விக்குறி தொக்கி நின்றது. விடை திக்கி நின்றது.

நிச்சயம் இவை உயரிய சிந்தனைகள் தாம். ஆனால் உதித்தது, தன்னுள் அல்ல என்று அம்பி அறிந்திருந்தான் . மேனகாவின் விழிகளில் சந்தேக சாயல் படர்வதைக் கண்டதும், பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டு அவளிடம் இருந்து விடை பெற்றான். 'எந்த ஒரு புரட்சிகரமான செயலுக்கும், நிச்சயம் தடைகள் வரத்தான் செய்யும். வெற்றி பெற்றதன் பின், எஞ்சுவது புகழ் மட்டுமே. 'கூட்டுணர்வு ஒப்பந்தங்கள் நன்மை செய்வதற்காக மட்டுமே, சேர்ந்து வாழ அல்ல. உன் நலனை விட உன் குடும்ப நலனும், குடும்ப நலனை விட நாட்டு நலனும் முக்கியத்துவம் வாய்ந்தவை', இது இந்த நாடு இதுவரை கேட்டு அறியாத தத்துவங்கள் தாம். இத்தகு உயரிய எண்ணங்கள் கொண்டவன், நல்லவனாகத் தான் இருக்க வேண்டும். புருஷோத்தமன் போன்றவர்களுடன் கூடுவதைக் காட்டிலும், இவனுடன் நட்பாய் இருப்பது உயர்ந்தது' என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

நகரத்தின் மறு பகுதியில் இருந்த இந்த பரந்த பழமையான பல்கலைக்கழகத்தில் தான் அம்பி படித்து வருகிறான். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஷ்ணுகுப்தர் அப்பாவுக்கு நெருங்கியவர். கறுத்த தமிழ் பிராமணர். அம்பியின் அப்பா, பல்கலைக்கழகத்திற்கு நிறைய நன்கொடைகள் வழங்கியவர் என்ற பெயரில் இருவரும் பரஸ்பரம் நெருங்கியவர்கள் ஆயினர். பெரிய மனிதர்கள் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதில், பல்கலைக்கு நிறைந்த வருமானம் அல்லது அரசாங்க மானியங்கள் வருவதால், கணிசமான இடங்கள் அவர்களுக்கு வழங்கி, தேர்ந்ததோர் அரசியல்வாதியாகவும் ஆகியிருந்தார் விஷ்ணுகுப்தர்.

பல்கலைக்கழகத்தை வந்தடைந்த போது ஒரு செய்தி காத்துக்கொண்டிருந்தது. அப்பாவிடமிருந்து "உடனே கிளம்பி வரவும்".

No comments:

Post a Comment