Thursday, October 20, 2011

உடனே கிளம்பி வரவும் -3

அவர்கள் பேசிக் கொண்டதன் படி, புருஷோத்தமன் நாளை காலை வந்து அதன் பின் முடிவு எடுக்கலாம் என்று இருந்தது. ஒருவேளை புருஷோத்தமன் விரைந்து வந்திருப்பாரோ? இல்லை. விளக்குகள் எரிய வில்லை. வேறு எதோ? யாரும் அம்பிக்காக காத்திருக்க வில்லை. பின் யார் எங்கே வரச் சொல்லியிருக்கக் கூடும். அப்பாவாக இருக்குமோ? என்று யோசித்த அம்பி, அங்கே சென்றான். அப்பா அங்கே உயிருடன் இல்லை. அவர் உடல் வெப்ப நிலையில் இருந்து அவர் இறந்து சில மணி நேரங்கள் ஆகி இருக்க வேண்டும் என்று தெரிந்தது. உறைந்து நின்றான்.

சில நிமிடங்களில் அனைவரும் கூடி விட்டனர். "என்ன பேசிக் கொண்டீர்கள்?" என்றான் அஜித். "எதுவும் பேசவில்லை". "எதுவும் பேசவில்லை என்றால் இந்த நேரத்தில் இங்கு எதற்கு..." "ஒரு தந்தை மகனுக்கு இடையில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும் பேசுவதற்கு. நீ அதைக் கேள்வி கேட்க வேண்டாம்." "கொலை செய்வதும் அதில் ஒரு விஷயமோ?" "அஜித், உளறாதே. என் அப்பாவை நான் ஏன் கொல்ல வேண்டும்? காரணம் வேண்டாமா?" "இன்று நடந்த விவாதம் போதாதா? உன் அப்பா உன் முடிவை ஏற்கவில்லை. நீ அதை ஏற்கவில்லை." "அதற்காக கொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் கொடுமைக்காரன் அல்லவே. ஏன் நீங்களே கொன்று விட்டு, என்னை அடக்க என் மீது கொலைப் பழி சுமத்துவதாகக் கொண்டால்...?" "ஓ நீ சூழ்ச்சியும் கற்றுக் கொண்டாய் அவனிடத்தில்! நாளைக் காலை, புருஷோத்தமன் வந்த பின் வைத்துக் கொள்ளலாம் எல்லா விவாதத்தையும். சென்று உறங்கு. எம்மவர்களின் காவலில்."

'இவனிடம் என்ன சொன்னால் கேட்பான்? புருஷோத்தமன், அஜித் அளவிற்கு கூட காது கொடுத்து கேட்க மாட்டான். நான் குற்றமற்றவன் என நிரூபிக்க ஏதேனும் வழி உள்ளதா? இருக்கிறது'. "நான் குற்றமற்றவன் இல்லை என இன்று இரவே நிரூபிக்கிறேன். கொலை நடந்த வேளையில் நான் இங்கு இல்லை என்றால், நான் செய்திருக்க முடியாது அல்லவா?" "ஓ நீ இங்கு இல்லையோ? பிறகு வேறு எங்கு இருந்தாய், மேனகாவின் மடியிலா?" எக்காளமாக சிரித்தான். "மேனகாவை வரச் சொல்லுங்கள். எல்லாம் புரியும்". "உன் காதலி உனக்கெதிராய் சொல்வாளா? இருந்தும் வரச் சொல்கிறேன். அவளிடம் இருந்து எப்படி உண்மையை வாங்குவது என்று எனக்கு தெரியும். வரச் சொல்". புருஷோத்தமனின் வேலையாள் ஒருவன் விரைந்து ஓடினான்.

நேரங்கள் கரைந்தது. அதோ வந்துவிட்டான், ஆனால் தனியாக! "எதிர் பார்த்தேன். நீ அகப்பட்டுக் கொண்டதும், உனக்கு முன் தப்பித்துச் சென்று விட்டாளா? என்ன காதல்? என்ன காதல்! போய் உறங்கு". அவர்கள் போய் விட்டார்கள்.

அம்பி குழம்பி விட்டான்.'மேனகா எங்கே சென்றாள்? அவளையும் அஜித் பிடித்துக் கொண்டு பொய் சொல்கிறானோ? அப்படித்தான் இருக்கும். திட்டம் பலமாகத் தீட்டி இருக்கிறான். இன்று இரவே தப்பித்து அவனுடன் சேர்ந்து விடுவது தான் உசிதம்.' இவ்வாறு எண்ணிக் கொண்டே அம்பி படுத்திருந்தான். எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. வாசலில் யாரோ அழைத்தார்கள். அம்பியின் ஆட்களாய்தானிருக்கும். அவன் திரும்பவில்லை. உருவம் நெருங்கி வந்தது.

விஷ்ணுகுப்தர்!

"அம்பி! நீ மிகப் பெரிய சதியில் மாட்டி இருக்கிறாய். உன் அப்பாவைக் கொன்றது போல் உன்னையும் கொன்று விடுவார்கள். எனக்கு நன்மை செய்தவர் குடும்பம் காணாமல் போவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ம்ம். சீக்கிரம் கிளம்பு. நான் உன்னை பிறகு சந்திக்கிறேன்." என்று தப்பிச் செல்வதற்கான எல்லா வழியையும் சொல்லிச் சென்று விட்டார்.

அம்பி தப்பித்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு செய்தி சொல்வதற்காக ஏதாவது/ யாராவது தென்படுகிறார்களா? என்று பார்த்தான். செய்தி என்றதும், நேற்று இரவு செய்தி சொன்ன கல் ஞாபகம் வந்தது கூடவே அது இருந்த இடமும். "ஆம். துணை வேந்தர் அறையில் அந்தக் கற்கள் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். இதே போன்ற கற்கள் மேனகாவின் வீட்டிலும், கிரேக்கத்தில் இருந்து வந்ததாய்ச் சொல்லி வைத்திருந்தார்கள். புரிந்து விட்டது. நேற்று வந்த செய்தி எனக்கல்ல. இந்த சதியில் அனைவரும் இருக்கிறார்கள். யார் எந்த விகிதத்தில் என்பது தான் தெரியவில்லை. அவனுக்கு செய்தி அனுப்பத் தான் வேண்டுமா? அனுப்பினால் தானே தெரியும்.. யார் யார் பக்கம் என்று" தெளிவான மனதுடன் அவனுக்குச் செய்தி அனுப்பினான் "உடனே கிளம்பி வரவும்"

(முற்றும்)

கதைமாந்தர்கள்:
உருவங்கள்:
அம்பி : தக்ஷசீலத்தை தலைநகராய்க் கொண்ட காந்தார நாட்டு இளவரசன், கிரேக்க மொழியில் 'Omphis'
விஷ்ணுகுப்தர்: தக்ஷசீல பல்கலைக்கழக துணை வேந்தர். வரலாற்று மொழியில் 'சாணக்யர்'
மேனகா: கணிகை. கற்பனைக் கதாப்பாத்திரம்.
அஜித் சந்திரன்: கைகேய படைத் தளபதி. கற்பனைக் கதாப்பாத்திரம்.

அருவங்கள்:
அவன்: மாசிடோனிய மாவீரன் அலக்சாண்டர்.
புருஷோத்தமன்: கைகேயத்தின் அரசன், பௌரவ வம்சத்தவன், கிரேக்க மொழியில் 'Porus'
மற்றும் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில்.

காலம்: கிமு நான்காம் நூற்றாண்டின் கடைசியில்.

No comments:

Post a Comment