Wednesday, October 19, 2011

உடனே கிளம்பி வரவும் - 2

புருஷோத்தமனின் ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்பதை வாசலிலேயே தெரிந்து கொண்டான். சமீப காலங்களில் அவர்களின் வரவு அதிகமாகி இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் அம்பியின் மீது புதிது புதிதாய் குற்றச்சாட்டுகளுடன் கிளம்பி வருகிறார்கள். அவர்கள் பேசும் விதத்தில் அம்பியின் அப்பாவும், அவர்கள் சொல்வதே சரி என்றும் நம்பி விடுகிறார். இவ்வாறு சிந்தித்துக் கொண்டே உள்ளே நுழைந்த போது, புருஷோத்தமனின் ஆட்களுடன், விஷ்ணுகுப்தரும் வந்திருப்பது கண்டு அம்பி வியப்படைந்தான். புருஷோத்தமனின் சார்பில் வழக்கம் போல், அஜித் சந்திரனே வந்திருந்தான். அப்பாவே ஆரம்பித்தார்.

"வகுப்புகளுக்கு சில வாரங்களாகவே செல்வதில்லையாமே?".
"விஷ்ணுகுப்தர் சொன்னாரா?"
"இல்லை. அஜித் சந்திரன் கூறிக் கேட்டது. விஷ்ணுகுப்தர் இந்த விவரத்தை சரிபார்க்க மட்டுமே வரவழைக்கப் பட்டார்."
'ஒரு மாணவனின் வருகை குறித்த தகவல் அளிக்க துணை வேந்தரே வருவதாவது? அந்த அளவுக்கு வளைந்து கொடுப்பவரா இந்த விஷ்ணுகுப்தர்? வேறு எதோ வில்லங்கம் இருக்கிறது '. "நான் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்வதில்லை, என்ற தகவலைக் கொடுக்கத்தான் அஜித் வந்தாரா?" என்று விஷ்ணுகுப்தரில் இருந்து பார்வையை விலக்கி அஜித் மேல் பதித்தான்.

"இல்லை. நீங்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல், வேறு எங்கு செல்கிறீர்கள் என்ற தகவலைத் தருவதற்கு வந்தேன்". மிகப் பெரிய இரகசியத்தை தான் அறிந்து கொண்ட பெருமையுடன் கூறினான்.
"எங்கு சென்றிருந்தாய்? அஜித் சொல்வது போல் ..."
"ஆம். இருந்தும், நான் யாரைச் சந்திக்கிறேன் என்ற செய்தி, புருஷோத்தமர்க்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன. இதனால் அவருக்கு என்ன நட்டம்?"
"நம் அனைவரின் நன்மைக்கக்காகவும் .." என்று அஜித் ஆரம்பித்தான். இந்த வாக்கு வாதம் மேலும் சில மணி நேரங்களுக்குத் தொடர்ந்தது.

மாலையில், மேனகாவுடன் இருக்கும் போது, மேனகாவே ஆரம்பித்தாள்."முற்பகலில் அஜித் சந்திரன் வந்தது போல் இருந்ததே. மறுபடியும் புருஷோத்தமனுடன் ஏதேனும் தகறாரா?". "ஆம். இந்த புருஷோத்தமனுக்கு என்னை ஏனோ பிடிக்கவில்லை. சென்ற முறை மாடுகளை கவர்ந்து வந்து விட்டேன் என்றார். மாடுகளை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? நான் ஏன் திருட வேண்டும்?". "பின்பு, அவைகளாகவா நடந்து வந்தன?" "மேனகா, அன்றே சந்தேகித்தேன். புருஷோத்தமன் வேண்டும் என்றே என்மேல் பழி போடுகிறான். இதனால் அவனுக்கு கிடைப்பது என்ன என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை அவனே கூட மாடுகளை இங்கே வந்து கட்டி இருக்கலாம்". "ஏன் வேறு யாரவது கூட உங்களுக்கு இடையில் பகையைக் கிளப்ப செய்யலாம் இல்லையா? நீங்கள் இன்னும் விழிப்போடு இருப்பது நல்லது." "சரி இன்று நடந்தது என்ன? சொல்லுங்கள்" என்றாள்.

அவளுடைய உடலைத் தழுவிக்கொண்டே முழுக் கதையையும் சொல்லி முடித்தான். "விஷ்ணுகுப்தரும் வந்திருந்தாரா?" "ஆம்". "கடைசி வரை எதுவும் பேசவில்லையா!" "ம். உன் ஆச்சர்யம் எனக்கு புரிகிறது. கடைசி வரை தம் கருத்தைக் கூறவும் இல்லை. விவாதத்தைக் கவனிக்கவும் தவற வில்லை. இந்த காரியத்தில் அவருக்கு உள்ள அக்கறை என்னைக் குழப்புகிறது." "நீங்கள் யோசிப்பது போல், எதுவும் இருக்காது. அவர் ஒரு உத்தமர். இந்த வகை சூழ்ச்சிகளில் ஈடுபட மாட்டார். அவருடைய கருத்தையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. மேலும் நீங்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டிய காலம் இது. ஜாக்கிரதை"

பேசிக் கொண்டு இருக்கும் போதே, ஒரு கல் உள்ளே வந்து விழுந்தது. இல்லை எறியப்பட்டது. இந்த உருவத்தில் உள்ள கற்களை அம்பி இதற்கு முன் பார்த்திருக்கிறான். எங்கே என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, மேனகா அவசரமாக பிடுங்கி வாசித்தாள். அதில் கண்டிருந்ததாவது "உடனே கிளம்பி வரவும்".

No comments:

Post a Comment