Friday, November 18, 2011

கரியன்- 2

கண்ணாடித்துரை என்றும் கண்ணடித்துரை என்றும் நெல்லை சீமை மக்களால் அழைக்கப்படும் அந்த ஆங்கிலேயர் ஒரு வணிகர். அங்கு விளையும் பணப்பயிர்கள் யாவற்றையும் குறைந்த விலையில் வாங்கி, தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபம் பார்த்து வந்தார். அவருக்கு ஏன் அந்த பெயர் என்று கேட்டால் பலரும் பல காரணங்கள் சொல்வார்கள்.
"அந்த ஆள், போட்ருக்குற கண்ணாடிக்காகத் தான்."
"கண்ணடிக்கிற நேரத்தில வியாபாரத்த முடிச்சிருவாரு. அதான்."
"அவரோட உளவாளிகளோட சங்கேதமா இருக்கும்... தெரியல.. "
"யார்கிட்டயும் சொல்லாதிய.. அந்த ஆள் கண்ணுல ஏதோ கோளாறு. கண்ணாடி இல்லைனா சிமிட்டிகிட்டே இருக்க வேண்டியதுதான்.

"இப்படி பலரும் பல கதைகள் சொல்வார்கள். சின்னக் கோனாரிடம் கேட்டிருந்தால் அவர் சொல்லி இருப்பார். "துரையோட நெசப் பேரு கன்னடியோ என்னவோ. அது வாயில நுழையாம தான் ஊரு இப்பிடி சொல்லிட்டு திரியுது." சின்னக் கோனார், கண்ணடித்துரைக்கு மிகவும் நெருங்கியவர். சிலர் அவரை அவரது காரியதரிசி என்பார்கள். ஆனால், சின்னக் கோனார் துரையிடம், மாத சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. வெறும் கமிஷன் மட்டும் தான்.

"வெல்டன் சின்னக் கோனார்" என்று சொல்லி விட்டு, தொலைவில் நின்ற அந்த கரிய உருவத்தின் கண்களை நோக்கியவர், சுய நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் ஆயிற்று.

இப்படி எத்தனையோ பேர்களை பார்த்திருக்கிறார். அவர்கள் சபிப்பார்கள். பரிதாபமாக முழிப்பார்கள். வெறுப்பை உமிழ்வார்கள். ஏமாற்றத்தின் வலி தெரியும். கோபம் தெறிக்கும். கண்ணீர் வடிப்பார்கள். வெறுமையில் நிறைவார்கள். சரி போகட்டும் என்று சென்றவர்களும் உண்டு. இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி பட்டவர்களும் உண்டு. ஆனால் அந்த பார்வை மேலே சொன்ன எதையும் தாங்கி நிற்கவில்லை. அது வேறு. அந்த பார்வை, அவருள் ஊடுருவி விட்டது. அவன் காட்டியது என்ன உணர்வு? அவன் பார்வை அவருக்கு எதையோ நினைவூட்டியது? எதை?

வண்டி நெல்லையில் உள்ள அவரது கிடங்கில் கொண்டு, அப்படியே தலை கீழாகக் கொட்டப் பட்டது.

"துரை.. சீக்கிரம் இதையெல்லாம் காலி பண்ணனும் தொரை. எலிங்க அதிகமா நடமாடுது."
"அது எவ்ளோ சாபிட்டுரும். விடு"
"இல்ல தொரை. நான் சொல்றது வேற.. சரி வேண்டாம் விடுங்க"

மறுநாள், கிடங்கின் காவலாளி கிடங்கினுள் இறந்து கிடந்தான். உடலில் ஏதும் காயங்களில்லை. இறுகப்பற்றிய கைகள். பயத்தில் உறைந்த, திறந்திருந்த கண்கள். பேய் பிசாசு எதுனா கண்டு பயந்திருப்பாரு என்று பேசிக் கொண்டார்கள். அடுத்த நாள் புதியதாக வந்த காவலாளி, உள்ளே அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதாகவும், இறந்தவர் ஆவியாக அலைவதாகவும் சொல்லி வேலையை விட்டு நின்று விட்டான்.

அடுத்து வந்த நாட்களில், உள்ளே சென்று காவல் காக்க வேண்டாம் என்றும் வெளியில் நின்று கவனித்தால் போதும் என்றும் சொல்லி ஒருவர் காவலுக்கு அமர்த்தப் பட்டார். அவரும் உள்ளே இரைச்சல் அதிகாக உள்ளதென்று பீதியிலேயே காலத்தை கழித்து வந்தார். சின்னக் கோனார் கூறியதன் பேரில், ஒரு மலையாள மந்திரவாதி வரவழைக்கப்பட்டு கிடங்கை பேய்களிடம் இருந்து மீது மீட்டு துரையிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

"துரை. பேய் பிசாசெல்லாம் பெரிய விஷயமில்ல துரை. நம்ம பொருளுக்கு ஒன்னும் ஆகாது"
"பேய். நான்-சென்ஸ். எல்லாம் இவங்க பயம். என் கவலை எல்லாம், இதை சொல்லியே காவக்காரனுக்கு அதிக பணம் தர வேண்டி இருக்குதேன்னு தான்"

சின்னக் கோனார், இது வரை பேய் பற்றி பயம் இல்லாதவரை கண்டதில்லை. துரை ஒரு மாவீரர் என்று எண்ணிக் கொண்டார். 'இதற்கும் அந்த கருப்பனின் பார்வைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது' என்று துரையின் உள் மனம் சொல்லிற்று. மந்திரவாதி உள்ளே சென்ற சில நொடிகளில் தலை தெறிக்க ஓடி வந்தார்.

"கரியன்.. துரை... கரியன்.. ஒன்னு ரெண்டு இல்லை நெறைய.. " என்று பட படைத்தார்.
"வாட் இஸ் திஸ் கரியன்... நீதான் எதவேணா விரட்டுவேன்னு சொன்னியே.. இதையும் சேர்த்து விரட்டு"
"இல்ல துரை.. கரியன விரட்ட ஏலாது. மனசு வெச்சு போனா காணாம். யாராலையும் முடியாது தொரை" என்றார் மந்திரவாதி.
"சின்னக் கோனார்.. வாங்க நாம உள்ள போய் பார்த்து வருவோம்" என்று அவரை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார் துரை.
"கரியன பிடிக்க முடியாது துரை. கரியன் பொல்லாதவன். வேண்டாம் வந்திருங்க" என்று மந்திரவாதி வெளியில் நின்று கத்திக் கொண்டிருந்தார்.

உள்ளே எலிகளின் நடமாட்டம் குறைந்திருந்தது. மூடைகள் ஒரு மூலையில் குவிக்கப் பட்டிருந்தன. காலடியில் ஏதோ சத்தம் கேட்கவே துரை குனிந்து பார்த்தார். தரையில் ஆறடி, தரைக்கு மேல் தூக்கிய தலை இரண்டடி, ஒரு லத்தி தடிமன். கரு கருவென ஒரு கரியன். தூரத்தில் அதே போல் பல கரியன்கள். எல்லா கரியன்களின் கண்களிலும் ஒரே தீட்சண்யம். துரைக்கு அந்த பார்வை புதிதல்ல. சில நாள் முன்பு பார்த்து மனதில் தங்கி விட்டஅதே பார்வை தான்.

சின்னக் கோனார், சரிந்து விட்டார். வெளியில் வந்த துரையின் கண்ணாடி எங்கோ விழுந்து விட்டிருந்தது. அதன் பின் துரையின் கண்கள் சிமிட்டவில்லை. மந்திரவாதியோ சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டிருந்தார்.

அன்று இரவே, கிடங்கு பொருட்களுடன் தீக்கிரை ஆக்கப்பட்டது. கரியன்களும் எரிந்து விட்டதாகவே துரை நம்பினார். மக்கள் நம்ப வில்லை.

"கரியன கரியாக்க முடியுமா? பல வருஷமா கண்ணுல தட்டு படாத கரியன், கூட்டம் கூட்டமா தட்டு பட்டு துரை கண்ணு வியாதிய குணமாக்கி இருக்குன்னா சும்மாவா.. கரியன அழிக்க முடியாது.. கரியன் தெய்வம்லா?"

1 comment:

  1. Nice story da Muni. The suspense was nicely maintained till the end. Way to go !!!

    ReplyDelete