Tuesday, November 1, 2011

பின்னோக்கி நட

"இந்த தடவையும் ஊத்திக்கிச்சா."

மும்பை நகரின் பிரதான ஐந்து நட்சத்திர ஓட்டலின் இருண்ட பாரின் ஒரு மேஜையில் ஒருவன். இந்த முறை தன் காதலை அவளிடம் சொல்லியே தீர்வது என்ற முடிவுடன் வந்து அமர்ந்திருந்தான். இந்த நாளை விட்டால் பின்பு என்று அவளைப் பார்ப்பானோ அவனுக்கே தெரியாது. அடுத்த ப்ராஜெக்ட் அவளோட கிடைச்சா தான் அடுத்த சான்ஸ். அவளிடம் செல்ல எழுந்தான். அதற்குள் மற்றொருவன் புகுந்து விட்டான். நகராமலா போவான், நகர்ந்ததும் அவளிடம் சொல்லி விடலாம். நகர்ந்தது அந்த மற்றொருவனின் கரங்கள் அவள் இடையில். இவன் நகர்ந்து விட்டான்.

அதே மும்பை நகரின் அதே ஓட்டலின் இருண்ட பாரில் மற்றொரு நாளில், அதே மேஜையில் ஆனால் மற்றொருவன். எல்லாரும் நல்லா தானே இருக்குன்னு சொன்னங்க. பின்ன ஏன்? இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியல பாஸ். அவங்களுக்கு எப்போ எது பிடிக்கும்னு சொல்ல முடியாது. பின்ன இந்த மக்களுக்காக நான் ஏன் கஷ்டப்படணும். கஷ்டப்படமாட்டேன்னு முடிவு எடுத்தான். இவனால வந்த கஷ்டத்தைக் கட்டிக்கிட்டு கஷ்டப்பட வேண்டிய அவசியம் தான் மக்களுக்கு என்ன?

அப்போதான் அவங்க ரெண்டு பெரும் அவங்கவங்க தோல்வியிலிருந்து விடுபட பின்னோக்கி நடக்க ஆரம்பிச்சாங்க. அதாங்க சினிமாலலாம் வருமே flashback. அதாவது அவங்க சந்தோசமா இருந்த காலத்து நிகழ்வுகளை அசை போட்டுட்டே நிகழ் காலத்தை ஓட்டிரறது. இவங்க பின்னோக்கி நடக்க ஏதுவா காலமுமா சினிமால வார மாதிரி அசையாம நிக்கும்? அது பாட்டுக்கு முன்னோக்கி போய்க்கிட்டு இருக்குது. இவங்களும் முன்னுக்கும் பின்னுக்குமா மனசும் காலமும் இழுத்த இழுப்புக்கு போனாங்க. இப்போ கதைக்கு வருவோம். அவங்க பின்னோக்கி போறாங்க, காலம் முன்னோக்கி போகுது. நிகழ்காலத்தில் இதை படிக்கிற நீங்க தான் எது முன்னே நடந்தது எது பின்னே நடக்க போறதுன்னு முடிவு பண்ணிக்கணும். என்ன குழப்பிடும்னு பயப்பட்றீங்களா? இவங்க யாரு என்ன கதைன்னு தெரிஞ்சுக்கணுமா. தொடர்ந்து படிக்கறத தவிர வேற வழியில்லை பாஸு. நீங்க தான் அலெர்ட் ஆச்சே, ட்ரை பண்ணுங்களேன்.

"இந்தக் கதை நிச்சயமா தோற்காது. ஜெயிக்கறதுக்கு தேவையான எல்லா மசாலாவும் சேர்த்து பண்ணி இருக்கேன்."

"கதையை சொல்லிடறேன். கேட்டும் புரியலன்னா பின் நவீனத்துவம் மாதிரி வேற ஏதாவது வார்த்தை சிக்காமலா போயிடப் போறது?"

"ஏம்பா.. யாரோ கதை சொல்ல வந்துருக்காங்க. வந்து என்னன்னு கேளு" என்றபடி அப்பா வெளியே சென்று விட்டார்.

"பெருசோ சிறிசோ, இருக்கிற நிலைமைல எதையாவது கேட்டு மனசு நோகும்படி ஏதாவது சொல்லிராத" அம்மாவை அப்பா எச்சரித்தார். எந்த ஊர்ல பொம்பளைங்க, புருஷன் சொல்றத கேட்டாங்க?

"வாழ்க்கைன்னா வெற்றி தோல்விகள் வந்து போகத்தான் செய்யும். இதுக்காக அடுத்த கதைக்கு போக மாட்டேன்னா எப்படி?" என்றாள். அவளுக்காக அடுத்த கதை.

"குடும்பத்துக்குள்ளேய ஒருத்தருக்கொருத்தர் காலை வாரிக்கறான்களே" என்று அங்கலாய்த்தாள்.

"கதையை எப்படி வேணா முடிக்கலாம். ஆனா அமங்கலமா தொடங்க வேண்டாமே"

"இந்த கதை ஜெயிக்கிதோ இல்லையோ, இதை வச்சே அவள மடக்கிடலாம்" என்பதற்காகவே இந்த படம்.

"புரியலைனா கடைசி நேரத்தில் ஸ்லைடு போட்டு சொல்லிட்டா போகுது"

"இந்தக் கையை இன்னும் கொஞ்சம் மேல, அழுத்தமா கூச்சப் படாம வைக்கணும். இது என்ன முதப் படமா? இந்தா நான் எப்படி பண்றேன்னு பாருங்க. இப்படி இப்படி"

"இந்த கதை நெறைய பேருக்கு புரியாதுன்னு நெனைக்கிறேன். ஜெயிக்குமா?"
"ஜெயிக்கறதுக்கு படம் எடுக்கறது அந்தக் காலம், இப்போ படம் எடுக்கறது வேற வேற காரணங்களுக்கு"

"இன்னைக்கு நைட் பார்ட்டி. படம் நல்லா வந்திருக்கு. எல்லாரையும் கூப்டிருக்கேன். நீயும் வந்திடு"

"உங்க முன்னாடி எப்படி எனக்கு கொஞ்சம் வெட்கமா இருக்கு"

"ஜீரோ டிகிரி ரொம்ப பிடிக்குமாமே. என்கிட்டயும் அதே மாதிரி ஒரு கதை இருக்கு சொல்லட்டுமா?"

"படம்னு வந்துட்டா, கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"

"உங்ககிட்ட நான் தனியா பேசணும். ராத்திரி பார்ட்டில பேசலாமா"

"எல்லாம் கதை தானே"

டைரக்டர் கதை சொல்ல ஆரம்பித்தார். "மொத்தமா கதைல அஞ்சு பேர். டபுள் ஹீரோ சப்ஜக்ட். அவங்களோட காதலி. அவங்களோட அம்மா அப்பா." ஹீரோ "அஞ்சு பேர்னு சொன்னே. எட்டு பேர் வர்றாங்களே". "கதையை முழுசா சொல்லிட்டா இந்த குழப்பம் வராது. இரண்டு தனித்தனி காதல் கதைகள் இணை கோடுகள். அந்த கதையில், இரண்டு காதலையும் இணைக்கிற மாதிரி இணைப்பா ஒரு உறவு வரும் போது, அது ப வடிவ காதல் கதை. இப்போ கதைக்கு தேவை ஆறு பேர் தான் இல்லையா. இணையாத அந்த இரண்டு முனைகளும், கோட்டால் இணைக்கப் படாது, புள்ளியில் இணைந்தால். மொத்தமா அஞ்சு பேர் தான் படத்தில. கதையும் முக்கோணக் காதல் கதை." "இது எந்த இங்கிலீஷ் படத்தில் இருந்து சுட்டது." "அட இது நம்ம சொந்தக் கதைப்பா" என்று முடித்தார் டைரக்டர்.

"கட்"

No comments:

Post a Comment