Wednesday, November 2, 2011

கொடைப் பழி

சிங்கிகுளம் பேச்சியம்மன் கோயில்ல ஐப்பசி கொடை. ஊர்ல உள்ள ஒவ்வொரு ஊட்லயும் சொக்காரவுக கூட்டம் நிறைஞ்சு இருந்தது. நாளைக்கு முதக் கொடை. அன்னைக்கே கிடா வெட்டு முடிஞ்சுடும். கடைசி நாள் கிடா வெட்னா, கறி திங்க யார் இருப்பா. அதான் முத நாளே வெட்டிர்றது. ஆனாலும் நம்ம ஆளுக என்ன லேசுப்பட்டவுகளா? கிடா வெட்னதும், கொடை முடிஞ்சதுன்னு அடுத்த வண்டில நடையைக் கட்டிர்றது. இந்த சொக்கரவுக கூட்டம், கிடா வெட்டபாக்கதுக்குன்னா வருதுன்னு நெனைக்கிரீக. கல்யாண வயசுல குமரியவோ, பயலையோ வச்சிருக்கவுக, அதுக்கு ஏத்த வரனா பாத்து பேசிக்க தான் வாரது. பேசி முடிக்கதுக்குன்னு அவுக ஊர் பெரியவுகளயும் கூட்டியாறதும் உண்டும். இந்த வாட்டி, எம்புட்டு கல்யாணம் பேசி முடிக்கப் போறாவுகன்னு ஊரே கணக்கு வச்சுக்கும்.

எசக்கி, இந்த நாளுக்கு தான் காத்து இருந்தான். சிங்கிகுளம் பள்ளியூடத்தில பத்தாப்பூ, இந்த வருஷன் தான் முடிச்சான். "மேல படிக்கனும்னா விளாகத்துக்கு தான் போவனும். ஒரு வருஷம் பொறு. இந்த தையில, அக்காளுங்க ரெண்டையும் கட்டிக் கொடுத்துட்டு, விளாகத்துக்கே போயிடுவோம்"னு அம்மை சொன்னதுக்கு சரின்னு தலையாட்டிட்டு வீட்லேயே, ஆடுகள மேச்சிட்டு கிடக்கான். பெரியவா செவாமி பத்தாப்பூ முடிச்சுட்டு சும்மா தான் இருக்கா. சூட்டியான பிள்ள. காட்டு வேலைக்கு நாலு பெற கூட்டி போறதும் ஒண்ணுதான், செவாமிய ஒத்தையா கூட்டி போறதும் ஒண்ணுதான். மூக்குக்கும் முழிக்கும் பஞ்சமில்லை. என்ன வாய்தான் நீளும். அதுவும் தங்கச்சி தேவானைட்டன்னா இன்னும் அதிகமா. தேவானையும் அளகு தான். இருட்டுல பார்த்தா அக்க யாரு தங்கச்சி யாருன்னு சொல்ல முடியாது. ஒரு வருஷம் தள்ளி பிறந்ததுக. செவாமி அளவுக்கு, தேவானைக்கு நிறம் கிடையாது பாத்துக்கிடுங்க. சோவை வந்தாப்பில, வெளிறி இருப்பா. நம்ம மண்ணுக்கு ஏக்காத நிறமோ என்னமோ, காட்டுக்கு போனா உச்சிக்குள்ள சீக்கு வந்த கோழியாட்டம் தல தொங்கி போகும். வாயும் அதிகமா பேச தெரியாது. படிப்பும் எட்ட தாண்டல. செவாமி, அவள உடம்பு செத்தவா, ஒத்த பிள்ளைக்கு தாங்க மாட்டானுல்லாம் பேசுவா. அம்புட்டுக்கும் ஒரு வாய் பேசாது தேவானை.

விளாகத்தில, செவாமியோட அம்மைக்கு ஒண்ணு விட்ட அண்ணன் ஒருத்தன் இருக்கான். அவன் மவன இந்த கொடையில பேசி முடிக்கறதா பேச்சு இருந்துச்சு. அவுகளும் வந்தாக. பேசியும் முடிச்சாக. சும்மாவே கிடந்தது சலம்புற செவாமிக்கு, சலங்கையும் கட்டி விட்டாப்ல ஆச்சு. "நான் என் நாலாவது பிள்ளைக்கு பேறு காலத்துக்கு வார மட்டும், இவளுக்கு கல்யாணம் ஆகாது. இடுப்பு செத்தவள எவன் கட்டுவான்". இம்புட்டு வார்த்தைக்கும் ஒரு பேச்சு வரல, கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரல தேவானைக்கு. பழவிப்போச்சோ என்னமோ?

ரெண்டாம் கொடை. அறுத்த கெடா, துண்டு துண்டா நார்க் கட்டில்ல காயுது. ரவைக்கு கும்பாட்டமும், குறவன் கூத்தும். கும்பாட்டத்துக்கு வாரியான்னா, "விளாகத்துக்கு கட்டிக் கொடுத்தப்பொறவு, கும்பாட்டத்தை நான் ஏன் பாக்கணும். இனிமே ஜினிமா தான் பாப்பேன்"னு நீட்டுனா செவாமி. "இன்னும் கட்டிக் கொடுக்கலல்லா.. வரலாம் வா" ன்னான் எசக்கி. "குடுத்தாதான் ஆச்சா? இன்னிக்கின்னு இல்ல, இனிமே இந்த பட்டிக்காட்டு பாட்டு எல்லாம் எனக்கெதுக்கு. வேணுமினா இந்த வெங்கொரங்க கூட்டிப்போ"ன்னு தேவானைய காட்டுனா. கும்பாட்டத்துக்கு பொறவு, அம்மையோட தேவானைக்கா, வீட்டுக்கு போயிருச்சு. வருஷா வருஷம், எசக்கியயும் இழுத்துட்டு போறவ, இந்த வாட்டி வாறியான்னு கூட கேட்காம போயிட்டா. குறவன் கூத்துக்கும், உட்கார்ந்துட்டான் எசக்கி. கூத்து போவ போவ, ஏன் அம்மை இம்புட்டு நாள் நம்ம பாக்க விடலன்னு புரிஞ்சு போச்சு எசக்கிக்கு. நாம பெரியவனாயிட்டோம்னு சந்தோசத்திலேயே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மூணாம் கொடைக்கி, சொரிமுத்து ஐயனார் வில்லுபாட்டு. வீட்டு வாசல்ல ஒலி பெருக்கி, இடி விழுந்தாலும் என் சத்தம் மட்டும் தான் உங்க காதுல விழணும்னு அலறிக்கிட்டு இருக்கு. செவாமிய தவிர எல்லாரும், வில்லு கச்சேரில இருந்தாக. மறுநாள், ஆட்ட ஓட்டிக்கிட்டு மலைக்கு மேய்ச்சலுக்கு கிளம்பினான் இசக்கி. "ஏல இசக்கி, இந்தா இத சூட்டு பாறைல போட்டு எடுத்து வந்துடு"ன்னு ஒரு பெரிய தூக்கில, ரெண்டு நாள் கட்டில்ல கிடந்த கறிய நிரப்பி அனுப்புனா.

ஒரு காலத்தில, சூட்டுப் பாறை கறிக்காக, ஊரே சட்டிய தூக்கிட்டு மலைக்கு வந்துடும். வெயில்ல கிடந்த கறி காஞ்ச கறி, சூட்டுப் பாறைக்கறி, வெந்த கறி. அவ்வளவு மெதுவா ஆக்கிப்புடும் கறிய. இப்போ ஒண்ணு ரெண்டு பேரு போட்டு எடுக்கரதுண்டு. சூட்டுப் பாறை பக்கத்தில தான், மொட்ட முத்து குடியிருக்கான். ஒரு காலத்தில சிங்கிகுளத்தில வாழ்ந்த குடும்பம் மொட்ட முத்து குடும்பம். ஏதோ தப்பு பண்ணிட்டான்னு துணி இல்லாம மொட்டையா ஊர விட்டு அவன அனுப்பிட்டாக. அன்னையிலிருந்து அவன மொட்ட முத்துன்னே ஊரு கூப்டுச்சு. அதுக்கு பொறவு, அவன் ஊருக்குள்ள வரவே இல்ல. அங்கேயே ஆடு மாடு மேச்சுட்டு கிடக்கான். "ஏல.. அந்த மொட்ட முத்துட்ட எந்த பேச்சும் வேணாம் என்னா?" அம்மை சொல்லி அனுப்பினா. இப்படியா ஒரு வாரம் போச்சு. கார்த்திகையும் பொறந்தாச்சு.

அதுக்குள்ள, தேவானை பொறக்கடிக்கு போய் திரும்பியும் வந்திட்டா. அவ வந்த மூணாம் நாள், செவாமி போகணும் அது கணக்கு. ஆனா போகல. நாலாம் நாளு, சீனி பலகாரமா வாங்கி செவாமி வாயில அம்மை திணிச்சா. ஐஞ்சாம் நாளு, கம்மாத் தண்ணிய கணவதிக்கு குடம் குடமா இறைக்கச் சொன்னா. காலையில இறைச்சவா, மாலையில பேச்சியம்மன் கோயிலுக்கும் போயிட்டு வந்துட்டா. ஆறாம் நாளு, "ஏட்டி செவாமி, சங்கரி சித்தி வீட்ல இருந்து அம்மி வாங்கியாரியா. அம்மி கொத்தி நாளாச்சுடி. அறைபடவே மாட்டேங்குது". அடுத்த தெருவில இருந்து, அம்மிக்கல்ல வாங்கி இடுப்பில தூக்கிக்கிட்டு ஊரு பாக்க வீட்டுக்கும் வந்துட்டா செவாமி. வந்த கல்லு மூலைக்கு ஒடுங்கிடுச்சு, செவாமி ஒடுங்கல, நடுக் கூடத்தில உட்கார்ந்து கிடக்கா.

"செவாமி, அம்மிக்கல்ல தூக்கியாரத பாத்தோம், அதான் என்னன்னு கேட்டுப் போகலாம்னு வந்தோம்" னு ஊரு வீட்ல சேர்ந்திருச்சு.

மறுநாள், திருகார்த்திகை, வீட்ட மொழுகி கோலம் போட்டுட்டு, "ஏல எசக்கி, அக்காளுக்கு உடம்பு முடியல. டவுனுக்கு போயிட்டு ரவைக்கு வந்திரலாம் வாயா" ன்னு அம்மை கூப்பிட்டா. 'விளாகத்துக்கு போனா போதாதா? ஏன் டவுனுக்குன்னு' எசக்கிக்கு புரியல. ரவைக்கு திரும்பி வந்தப்போ, வீட்ல தேவானைய காணோம். "எய்யா, மவளக் காணோமே. எங்க போனா" ன்னு அம்மை கேட்கறா. அஞ்சாறு வருஷமா, திண்ணைய தாண்டி வீட்டுக்குள்ளயே வராத ஐயாவுக்கு, மவ உள்ள இருக்காளா, வெளிய போய்ட்டாளான்னு எப்படி தெரியும். ஊர் முழுக்க தேடியும் தேவானைய காணல.

மறுநாள், வீட்ல இருக்கா முடியல எசக்கிக்கு. ஆடுகள ஓட்டிட்டு மலைக்கு வந்துட்டான். மொட்ட முத்து குடிசைல யாரும் இல்ல. உள்ள போட்டது போட்ட படிக்கு இருக்கு. கொஞ்சம் கடுதாசிகளும் கிடைச்சுது. எல்லாத்திலையும் தேவானக்கா கையெழுத்து தான். ஒன்னொன்னா படிக்கான்.
"ரவைக்கு கிளம்பி இரும். அவுக வாரதுக்குள ஊர விட்டு போய்டுவோம் - தெய்வானை"
"எசக்கி கிட்ட எதையாவது பேச்சை கொடுத்து ஒளறி கெடுத்துடாதீக. வாய மூடி இரும் -தெய்வானை"
"இன்னைக்கு குளிச்சிட்டேன். பயமில்ல - தெய்வானை"
"வில்லு கச்சேரிக்கு, போகல. வீட்ல நான் மட்டுந்தான். வந்தா சொகமுண்டும் -தெய்வானை"
"செவாமிக்கு கல்யாணம் பேசியாச்சு. அடுத்து நம்ம கல்யாணம் தான் - தெய்வானை"
"நல்ல வேல, என்னைக் காமிச்சு குடுத்திருவீரோன்னு பயந்துட்டேன். மொட்டையாக்கினாலும், வெளில சொல்லல பாத்தியளா. அதான் உம்ம கிட்ட எனக்கு பிடிச்சது - தெய்வானை"

No comments:

Post a Comment