Tuesday, November 1, 2011

ஒரு வயசு புத்திசாலி

தூக்கத்தில் இருந்து கண் விழித்து பார்க்கிறேன், எல்லாமே மாறி இருக்குது. இது எங்களோட இடம் இல்ல. எங்களோடதுன்னா, நான், அம்மா, அப்பா, சித்தி, பெரியம்மா, அக்கா, பாட்டி இப்படி எங்களோடது. அவங்களும் கூட இங்க இல்ல. நான் எப்படி இங்கே வந்தேன்னு எனக்கு தெரியல. ஆனால் இப்படி ஒரு நாள் நடக்கும், அப்படி நடக்கும் போது நான் என்ன செய்யணும்னு எனக்கு எங்க அப்பா சொல்லிக் கொடுத்திருக்கார். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் நெனைச்சு பார்க்கல. பொதுவாவே எனக்கு எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கிறது அம்மா தான். ஆனா இந்த ஒரு விஷயத்தை மட்டும் அப்பா சொல்லி இருக்கார். மறுபடியும் மறுபடியும். இதை தவிர அப்பா எனக்கு வேற எதையும் சொன்னதா ஞாபகம் இல்ல. அப்படி எனக்கு என்ன வயசாயிடுச்சு. மிஞ்சிப் போனா ஒரு வயசு இருக்குமா. ஐயையோ கதையோட சஸ்பென்ச சொல்லிட்டேனோ. பரவாயில்ல. இதுவே வேற யாராவது இருந்தா இந்நேரம் அழுது இருக்கணும். நான் அழறேனா? இல்ல. இந்த ஒரு வருஷமா எனக்கு அம்மா கொடுத்த அறிவும், நம்பிக்கையும் வீண் போகாது. கண்ணைத் தொட்டு பார்க்கிறேன். இல்ல அழல. இப்போ முத வேலையா அவங்க எங்க இருக்காங்கன்னு கண்டு பிடிக்கணும். எங்களுக்கு வேண்டாதவங்க யாரோ தான் இந்த காரியத்த செஞ்சிருக்கணும். எழுந்து கொஞ்ச தூரம் நடந்து போகிறேன்.

நான் அங்கே இருந்தவரை, எழுந்ததும் ஏதாவது சாப்பிட இருக்கும். இன்னும் அப்பா அம்மா மாதிரி கடின உணவு வகைகளை சாப்பிட பழகல. எனக்குன்னு அம்மா மென்மையா எதோ சாப்பிடக் கொடுப்பாங்க. அது பேர் கூட எதோ.. அட மறந்துடுச்சே. உங்களுக்கு தெரியுமா? நான் என்ன சாப்டுவேன்னு, சொல்லுங்களேன். இல்ல அதெல்லாம் இல்ல. நீங்க சொல்ற எதுவுமே இல்ல. அது பேரு வேற எதோ. ஒரு நிமிஷம், கடவுள்கிட்ட கேட்கலாமே. உங்களால எல்லாம் கடவுள் கிட்ட அவ்வளவு சுலபத்தில பேசிட முடியாது. ஆனா நான் நெனச்ச நேரத்தில, கடவுள் கிட்ட பேச முடியும். நான் வாங்கி வந்த வரம் அப்படி. என்னோட வயசு தான் காரணம்னு சொல்றீங்களா? இருக்கலாம். "ஹலோ கடவுளே. நான் சாப்பிடுற அந்த பொருள் பேர் என்ன?" "நான் சொல்ல மாட்டேன். எத்தன தடவ அம்மா சொல்ற எல்லாத்தையும் கேட்டு ஞாபகம் வச்சுக்கோ. என்னைக்காவது தேவைப் படும்னு சொல்லி இருக்கேன். நீ கேட்கல. நான் சொல்ல மாட்டேன். நீயா தெரிஞ்சுக்கோ" என்று சொல்லி விட்டு கடவுள் மறைந்து விட்டார். அம்மா சொல்லி இருக்காங்க, கடவுள்னாலே இப்படி தானாம். தேவை இல்லாதப்போ அட்வைஸ் கொடுத்துட்டே இருப்பாராம். ஆனா தேவைன்னு கேட்டா சொல்ல மாட்டாராம். கேட்டா திருவிளையாடல், லீலைன்னு கலாய்ப்பாராம். இன்னும் கொஞ்ச நேரம் நடந்து பாப்போம், ஏதாவது தென்படுதான்னு. அதோ அவர்கிட்ட கேட்டு பாப்போம்.

இவரையும் எங்கேயோ ஒரு நாள் பார்த்திருக்கோமே. அவர்கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன். அவருக்கு என்ன புரிஞ்சதோ தெரியல. அவருக்கு நான் பேசற எதுவுமே புரியலன்னு நெனைக்கிறேன். அவர் என்கிட்டே கேட்டார்? "பசிக்குதா? என்ன சாப்பிடுவே?". நாசமாப் போச்சு. இவருக்கும் நான் என்ன சாப்பிடுவேன்னு தெரியல.ஏதோ இந்த மட்டுக்கும் புரிஞ்சதே. வர வர இந்த உலகத்தில முட்டளுங்களோட எண்ணிக்கை கூடிட்டே போகுது. எல்லாரும் எங்க குடும்பத்தில உள்ள அளவுக்கு புத்திசாலிங்க இல்ல. இவர் பாக்க கருப்பா மலையாட்டம் இருக்கார். ஆள் வளர்ந்தா மட்டும் போதுமா. "நீ என்ன சாபிடுவேன்னு எனக்கு தெரியலியே. இது சாப்பிடுவியா?". ஐயே.. இத யாராவது சாப்பிடுவாங்களா? இல்லைன்னு தலை ஆட்டினேன். "என்கிட்டே இது தான் இருக்கு. உன்னையும் விட்டுட்டு போயிட்டாங்களா? பயப்படாதே. உனக்கு வேற ஏதாவது வேணுமா?" என்று கேட்டார். நான் காலைக் காட்டி, கால் வலிக்குதுன்னு சொன்னேன். "நான் உன்னைத் தூக்கிக்கவா?" என்று கேட்டார். சரி என்று ஏறிக் கொண்டேன். "நல்ல பொதுக் பொதுக்குன்னு மெல்லிசா இருக்கியே" என்றார். "எங்க அம்மா இன்னும் சாப்டா இருப்பாங்க" "பொம்பளைங்க எல்லாருமே அப்படிதான்" என்றார். ஐயே என்ன இவர் வல்கரா பேசறார்.

அதற்கு பின் அவரிடம் பேசவே மனசு வரல. இப்படிதான் பொம்பளைங்கள பத்தி கமன்ட் பண்றதா? அவர் எதோ கதை கதையா பேசிட்டே போனார். அப்பா சொல்ற அதே கத மாதிரி தான் இருந்தது. ஆனா வேற மாதிரியும் இருந்தது. அப்பா அளவுக்கு இவர் புத்திசாலியும் இல்ல. அப்பாவோட விஞ்ஞான அறிவு, என்னோட ஜீன்களில் இருப்பதால தான் நான் இந்த வயசிலேயே இவ்வளவு புத்திசாலியா இருக்கிறேன். இவர் இன்னும் பரிணாம வளர்ச்சியில பல படிகளைக் கடக்க வேண்டியிருக்கு. என்னோட அப்போவோட ஆராய்ச்சி மட்டும் வெற்றி ஆயிடுச்சுன்னா,எங்களோட சந்ததிகள் எல்லாருமே invisible ஆகிருவோம். அதுக்கு அப்புறம், இந்த கடவுள் இருக்காரே, அவர மாதிரி யார் கண்ணுக்கும் தெரியாம எங்க இஷ்டத்துக்கு வாழ்க்கைய வாழலாம். அவர மாதிரியே திருவிளையாடல், லீலைன்னு பண்ணிக்கிட்டு ஜாலியா பொழுது போக்கலாம். இது எல்லாம் நடக்கணும்னா, முதல்ல நான் உயிரோட இருந்து ஆகணும். அதுக்கு சாப்பாடு வேணும். "நிறுத்துங்க".அந்தா இருக்கு என்னோட சாப்பாடு.

"ஹலோ, என்ன கேட்டிங்க. இதையா சாபிடுவேன்னா? நீங்க என்னை என்ன மனுஷன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கீங்களா. மனுஷங்கள் தோன்றதுக்கே இன்னும் சில ஆயிரம் வருஷங்கள் ஆகும். அந்த நேரத்தில எங்களோட சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிச்சு, நாங்க தான் அவங்கள ஆட்டி வைப்போம். எங்களோட அறிவு உங்க மனுஷங்கள விட, பல மடங்கு அதிகமா இருக்கும் அப்போ. உதாரணத்துக்கு இதையே எடுத்துக்கங்களேன். பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த எங்க இனத்தவர்களில் இளையவனான என்னோட அறிவையே, சரியா யூகிச்சு எழுத முடியாம இந்த மடையன் திணறிக் கிட்டுருக்கான். என்னைப் போய் மனுஷனான்னு கேட்டுட்டிங்களே. என்ன அவமானம். இன்னொரு தடவ அந்த மாதிரி கேட்டிங்கன்னு வைங்க, இப்போ உங்ககாலத்தில வாழ்ந்துட்டு இருக்கிற எங்க ஆளுங்க உங்கள ஒன்னும் இல்லாம ஆக்கிருவாங்க. ஜாக்கிரத. என்ன கடவுளே.. நான் சொல்றது சரி தானே?"

"இந்த species க்கும், தான் என்கிற அகம்பாவம் வந்திருச்சே. இப்படி எத்தன இனங்கள அழிக்கிறது. தயவு செஞ்சு நீங்களாவது, நான் தான் புத்திசாலின்னு அகம்பாவம் பிடிச்சு அலையாதீங்க. ப்ளீஸ்" என்று கடவுள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறார்.

4 comments:

  1. நல்ல கற்பனை. மனிதன் தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, இந்த உயிரினத்திற்கு மனிதனைப் பற்றி தெரிந்திருப்பதுதான் சற்றே குழப்பமாக உள்ளது.

    ReplyDelete
  2. "இன்னும் சில ஆயிரம் வருடங்களில் கடவுள் உருவாக்கிக் கிட்டு இருக்கிற மனிதன் என்ற படைப்பை வெளியிட்டு விடுவார்னு யூகித்து அறிய கூடிய புத்திசாலி அதுன்னு" நான் தெளிவா சொல்லாததால தான் என்னை மடயன்னு திட்டி இருக்குன்னு நெனைக்கறேன்.

    Anyways, thanks for confirming his (its) statement.

    Muniaswamy

    ReplyDelete
  3. என்ன கடவுளே.. நான் சொல்றது சரி தானே?"

    ஹாஹா.... ரொம்ப சரிங்க .............

    ReplyDelete
  4. thanks @nilamathi

    Regards
    Muniaswamy M

    ReplyDelete